கிருமித்தொற்று விகிதம் கூடுவதால் மலேசியாவில் கவலை

1 mins read
7e8379e1-0c23-4e9d-97d6-9ced61200c65
முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில், புதிய தொற்றுகளின் எண்ணிக்கையும் தொற்று பரவல் விகிதமும் அதிகரித்துள்ளன. படம்: ஏஎஃப்பி -

தேசிய அளவிலான கொவிட்-19 கிருமித்தொற்று விகிதம் அதிகரித்து வருவதன் தொடர்பில் மலேசிய சுகாதார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மலேசிய சகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 7 தொடங்கி நவம்பர் 13 வரை நீடித்த 45வது தொற்றுநோயியல் வாரத்தில் சராசரி கிருமித்தொற்று எண்ணிக்கை, தொற்று மரணங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தபோதிலும் தேசிய அளவிலான தொற்றுப் பரவல் விகிதம் 1.05 ஆக உள்ளது. இது நோய்த்தொற்று அதிகரிப்பதையே உணர்த்துகிறது.

இந்த விகிதம் 1க்கும் கீழ் இருந்தால் தொற்று குறைந்து வருவதாகப் பொருள்.

"நிலைமை கவலைக்குரியதாகத் தொடர்கிறது. முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில், புதிய தொற்றுகளின் எண்ணிக்கையும் தொற்று பரவல் விகிதமும் அதிகரித்துள்ளன.

"சமூக அளவில் தொற்று பரவும் அபாயத்தையும் கிருமித்தொற்றால் மேலும் பலர் பாதிக்கப்படும் நிலையையும் இது உணர்த்துகிறது.

"எனவே பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. தொற்றுப் பரவலை உடனடியாகக் குறைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.