கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் இம்மாதம் 20ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து கடற்பாலம் வழியாக மலேசியா செல்ல முடியும்.
இருநாடுகளுக்கும் இடையிலான தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயணத்தட திட்ட (விடிஎல்) விரிவாக்கம் இதற்கு வகைசெய்கிறது.
அதுபோல, தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசியர்களும் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி கடற்பாலம் வழியாக சிங்கப்பூருக்கு வரலாம்.
இப்போதைக்கு, அந்தந்த நாடுகளின் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டைதாரர்களே தரைவழி ‘விடிஎல்’ மூலமாகப் பயணம் செய்கின்றனர்.
அதேவேளையில், இவ்விரு நாடுகளிலும் இப்போதுள்ள பரிசோதனை நடைமுறைகளில் எந்த மாற்றமும் இராது என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
“சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் அனைவரும் நடப்பிலுள்ள பரிசோதனை நடைமுறைகளையும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
எடுத்துக்காட்டாக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் அனைவரும், இங்கு வந்திறங்கிய பிறகு ஏழு நாள்களுக்கு தாங்களாகவே ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) செய்துகொள்ள வேண்டும். மூன்றாம், ஏழாம் நாள்களில் மட்டும் விரைவுப் பரிசோதனை மையத்திற்குச் சென்று அவர்கள் அப்பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, மலேசியா செல்லும் பயணிகளும் ஆறு நாள்களுக்கு நாள்தோறும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சிங்கப்பூர்-மலேசியா இடையிலான ‘விடிஎல்’ திட்டம் வான்வழியாகவும் தரைவழியாகவும் சென்ற மாதம் 29ஆம் தேதி தொடங்கியது.