மலேசியாவில் புதிய கொவிட்-19 பாதிப்புகள் குறைந்து வந்தாலும், கிருமிப் பரவலுக்கு எதிரான விழிப்புநிலையைக் கடைப்பிடிப்பதில் மெத்தனம் வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நினைவுபடுத்தியுள்ளார்.
மலேசியாவில் மேலும் 11 பேரிடம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பிரதமர் இஸ்மாயில் அதுகுறித்து சனிக்கிழமை (டிசம்பர் 18) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மலேசியாவில் இதுவரை மொத்தம் 13 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா வந்தவர்கள்.
மலேசியாவில் சனிக்கிழமை புதிதாக 4,083 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் அன்றாடம் 20,000க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பதிவாகி இருந்தது. அந்த நிலவரத்துடன் ஒப்புநோக்க, தற்போது மலேசியாவில் கொவிட்-19 நிலவரம் மேம்பட்டு வருகிறது.
அன்றாட கொவிட்-19 பாதிப்பு குறைந்து வந்தாலும், கொவிட்-19 தொற்று அபாயத்தில் இருந்து மலேசியா இன்னும் விடுபடவில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் இஸ்மாயில் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
"வர்த்தக நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கியபின், அவற்றை மறுபடியும் மூட மாட்டோம் என்று மக்களுக்கு நான் உறுதியளித்து இருந்தேன். மீண்டும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு நாம் நடக்க வேண்டும்," என்றார் பிரதமர் இஸ்மாயில்.


