ஐரோப்பாவில் ஓமிக்ரான் கிருமி ‘மின்னல் வேகத்தில் பரவி வருவதாக’ பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரான்சில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக ஓமிக்ரான் அமையக்கூடும் என்று அவர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) கூறினார்.
அண்டை நாடான பிரிட்டனில் இருந்து வருவோருக்கு பிரான்ஸ் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வருவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு பிரெஞ்சு பிரதமர் ஓமிக்ரான் தொற்று குறித்து எச்சரித்தார்.
ஓமிக்ரான் தொற்று காரணமாக ஐரோப்பாவிலேயே ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு பிரிட்டன். வெள்ளிக்கிழமை அங்கு கிட்டத்தட்ட 15,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது.
இந்நிலையில், மற்றொரு கிருமித்தொற்று அலைக்கு ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன.
தொற்றைக் கட்டுப்படுத்த ஜெர்மனி, நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இதுவரை சந்திக்காத சவால் ஒன்றுக்கு ஜெர்மனி தயாராக வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே, தொற்றைக் கட்டுப்படுத்த நெதர்லாந்து மீண்டும் முடக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.