கொவிட்-19 நிலவரம் கட்டுக்குள் வந்திருப்பதால் அடுத்த வாரம் முதல் பயணக் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாகத் தளர்த்தப்படும் என்று பிரதமர் லீ சியங் லூங் அறிவித்து உள்ளார். எளிமைப்படுத்தப்பட்ட தடுப்பூசி போட்டோருக்கான பயணக் கட்டமைப்பின்கீழ் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் விதிகள் நெறிப்படுத்தப்படும் என்றார் அவர்.
"குறிப்பாக, சிங்கப்பூருக்குள் நுழையும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வருகையாளர்களுக்குரிய பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இந்த மாற்றங்களால் சிங்கப்பூரர்கள் வெளிநாட்டுப் பயணங்களை எளிதாக மேற்கொள்ள முடியும்.
"கிட்டத்தட்ட கொவிட்-19 நிலவரத்துக்கு முன்பிருந்ததைப் போன்ற நிலையை மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உலகத்துடனான தொடர்பை மீட்க சிங்கப்பூருக்கு அவை உதவும்.
"வர்த்தகங்களுக்கு அதிகமாகத் தேவைப்படும் வளர்ச்சிக்கு அவை கைகொடுக்கும். குறிப்பாக பயணத்துறை வளர்ச்சி. ஒரு வர்த்தக மற்றும் விமானப் போக்குவரத்து நடுவமாக சிங்கப்பூர் அதன் நிலையை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள இந்த மாற்றங்கள் அவசியம்," என்று திரு லீ விளக்கினார்.
தற்போதைய விடிஎல் ஏற்பாட்டின்படி, அந்த ஏற்பாட்டில் பங்கெடுத்துள்ள நாடுகளில் ஏழு நாள்கள் இருந்தவர்கள் சிங்கப்பூருக்குள் நுழையும்போது அவர்
களுக்குத் தனிமை உத்தரவு கட்டுப்பாடு இருக்காது.
மேலும், அவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருப்பதோடு விடிஎல் விமானங்கள், பேருந்துகள், பயணப் படகுகளில் மட்டுமே அவர்கள் பயணம் செய்ய வேண்டும். பயணத்திற்கு முன்னர் தொற்றில்லை சான்றிதழை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அண்மையில் தொற்றிலிருந்து குணமடைந்த சான்றுகளை அவர்கள் தரவேண்டும். மார்ச் 29ஆம் தேதி முதல் இவற்றை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.