வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கைக்கு உலக வங்கி US$160 மில்லியன் ($S222மில்லியன்) குறுகியகாலக் கடன் வழங்கி உள்ளது.
அவசரமாக தேவைப்படக்கூடிய பொருள்களை இறக்குமதி செய்துகொள்ள வசதியாக இலங்கைக்கு அந்த உதவி கிடைத்து இருக்கிறது என்று புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று கூறினார்.
அந்தத் தொகையைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்ய முடியுமா என்பதன் தொடர்பில் தாங்கள் செயல்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெட்ரோல் ஏறக்குறைய வற்றிப்போய்விட்டது என்று திங்கட்கிழமை அவர் தெரிவித்து இருந்தார்.
எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று எரிசக்தித் துறை அமைச்சர் குடிமக்களுக்கு வேண்டுகோள்கூட விடுத்து இருந்தார்.
இலங்கைக்கு உடனடியாக US$75 மில்லியன் ($S104 மில்லியன்) அந்நியச் செலாவணி தேவைப்படுவதாகவும் அத்தியாவசியப் பொருள்கள் இறக்குமதிக்கு அது அவசியம் என்றும் திரு ரணில் திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்து இருந்தார்.
இலங்கை பொருளியல் நிலவரம் நொடித்துப் போகும் அளவுக்கு வந்துவிட்டது என்றும் இதற்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே குடும்பமே காரணம் என்றும் ஆகை யால் அதிபரும் பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சே விலகிவிட்டார். ஆனால் அதிபர் கோத்தபாயவை பதவியில் இருந்து அகற்ற நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 40,000 டன் அரிசி, 500 டன் பால் மாவு, 137 வகையான உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவை உள்ளிட்ட ரூ.80 கோடி மதிப்புள்ள உதவிப் பொருள்களை ஏற்றிக்கொண்டு நேற்று 'டான் பின்-99' கப்பல் இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றது.
முதலமைச்சர் ஸ்டாலின் அந்தக் கப்பலை வழியனுப்பி வைத்தார்.
சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட அந்தக் கப்பல் 44 மணி நேரத்தில் கொழும்பு துறைமுகத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.