சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை 29ஆம் தேதியிலிருந்து கட்டம் கட்டமாகத் திறக்கவுள்ளது.
வரும் மாதங்களில் சாங்கி விமான நிலையத்துக்கு பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சாங்கி விமான நிலையக் குழுமம் இதை ஞாயிறு (மே 22) அன்று அறிவித்துள்ளது.
இரண்டாவது முனையம் கடந்த 2020 மே மாதத்திலிருந்து மேம்பாட்டுப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.
அந்த மேம்பாட்டு விரிவாக்கப் பணிகள் வரும் 2024ஆம் ஆண்டு முடிவடையும்.
தற்போது 23 மில்லியன் பயணிகளைக் கையாளும் வசதி கொண்ட இரண்டாவது முனையம், அப்போது 28 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஆற்றலைப் பெறும்.
இப்போதைக்கு முதல் கட்டமாக இரண்டாவது முனையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள வருகை, புறப்பாடு, பயணப்பெட்டிகளைப் பெற்றுக்கொள்ளும் வார்கள் போன்றவை தயாராக இருக்கும்.
மூன்றாவது முனையத்திலிருந்து செயல்படும் சில விமானச் சேவைகள் உச்ச நேரங்களின்போது இரண்டாவது முனையத்தில் இயங்கும்.
அதனால் சில விமானப் பயணங்களின்போது மூன்றாவது முனையத்தில் குடிநுழைவுச் சோதனையைக் கடந்துவிட்டு பின்னர் இரண்டாவது முனையத்துக்குச் சென்று விமானத்தில் ஏற வேண்டியிருக்கலாம்.
அத்தகைய விமானச் சேவைகள் மூன்றாவது நிலையத்திலிருந்து புறப்படுவதாகக் குறிப்பிடப்படும்.
மேலும், சாங்கி விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்கச் செல்பவர்கள், விமானம் எந்த முனையத்தில் இறங்குகிறது என்பதை சரிபார்த்துவிட்டு செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விமானம் தரை இறங்குவதற்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்னதாக அந்தத் தகவல் சாங்கி விமான நிலையத்தின் இணையத்தளத்திலும் ஐ-சாங்கி (IChangi) செயலியிலும் இடம்பெறும்.
இரண்டாவது முனையத்தில் கூடுதலான தானியங்கி குடிநுழைவுச் சோதனை முகப்புகளும் சிறப்பு உதவி வழிகளும் இருக்கும்.