தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமணமாகி மூன்றே வாரங்களில் விபத்தில் மாண்ட பெண்

2 mins read
69aec136-0383-49f3-bffe-b5e3ed368c3b
விபத்து தொடர்பில் 54 வயது சிற்றுந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். படம்: Buffybuffy in Hardwarezone -

தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் கடந்த திங்கட்கிழமை காலை இரு மோட்டார்சைக்கிள்களும் சிற்றுந்தும் மோதிக்கொண்டதில் மாது ஒருவர் மாண்டார்.

யாஸ்மின் அப்துல்லா எனும் அந்த 26 வயதுப் பெண்ணுக்குத் திருமணமாகி மூன்று வாரங்களே ஆகின்றன.

கணவர் முகம்மது ஸாகித் அப்துல் கஃபாருக்கு வயது 29. தன் மனைவியைத் தனது மோட்டார் சைக்கிளில் நாள்தோறும் காலையில் அவர் பணிபுரியும் பல் மருந்தகத்தில் விட்டுச்செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

திங்கட்கிழமை நடந்த விபத்தில் திரு ஸாகித் உயிர்பிழைத்த நிலையில், திருவாட்டி யாஸ்மின் உயிரிழ்ந்தார்.

இணையப் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் திரு ஸாகித்தின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரின் சகோதரி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த அவருக்குப் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாஸ்மினின் தந்தையான 64 வயது அப்துல்லா சன்யார், சென்ற மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற திருமணம் தன் மகளின் வாழ்வில் இனிய தருணம் என்றும் திருமண வாழ்வை அவர் மிகவும் விருப்பத்துடன் எதிர்நோக்கி இருந்தார் என்றும் பெரித்தா ஹரியான் நாளேட்டிடம் தெரிவித்தார்.

திருமணத்துக்குப் பிறகும் கல்வியைத் தொடரவும் வீடு வாங்கவும் யாஸ்மின் ஆர்வம் கொண்டிருந்தார்.

பட்டயக் கல்வியை முடித்தபின் உடல்நலக் கோளாற்றால் அவரால் மேற்கல்வியைத் தொடர இயலவில்லை என்றும் தன் மகள் எப்போதும் சிரித்த முகத்துடன் வளைய வருபவர் என்றும் திரு அப்துல்லா கூறினார்.

அன்புக்குரிய தன் தங்கையின் மறைவால் அனைத்தையும் இழந்ததுபோல் உணர்வதாகக் கூறினார் யாஸ்மினின் அக்கா அலியா ஃபட்டின்.

விபத்து தொடர்பில் சிற்றுந்தை ஓட்டிய 54 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.