காஸா: பட்டினியால் வாடும் சூழ்நிலையில் கடந்த மூன்று நாள்களில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 21 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக காஸாவில் உள்ள பெரிய மருத்துவமனையின் தலைவர் கூறினார்.
காஸாவில் உள்ள இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் இல்லாததால் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
விநியோக மையங்களில் மனிதாபிமான உதவிகளைப் பெறும்போது சில குடியிருப்பாளர்கள் நெரிசலில் உயிரிழக்க நேர்கிறது.
இந்நிலையில், காஸாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 21 குழந்தைகள் இறந்துவிட்டதாக அல் ஷிஃபா மருத்துவ வளாகத்தின் இயக்குநரான முஹமட் அபு சால்மியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காஸாவில் எஞ்சியுள்ள மருத்துவமனைகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பட்டினியால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகள் ஒவ்வொரு கணமும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
பட்டினியால் ஏற்படும் இறப்புகள் அபாயகரமான எண்ணிக்கையில் இருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
அண்மையில் பேசிய ஐநா பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், இறப்புகளும் அழிவுகளும் அதிகரித்திருப்பதாகக் கூறியிருந்தார்.
ஆறு வாரம் நீடிக்கும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் முறிந்த பிறகு இஸ்ரேல் இவ்வாண்டு மார்ச் 2ஆம் தேதியிலிருந்து காஸாவில் தடைகளை அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
போர் நிறுத்தத்தின்போது குவிக்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருள்கள் படிப்படியாகக் குறைந்து காஸா மக்கள் தற்போது மிக மோசமான பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர்.