3,000 ஆண்டு பழைமையான மனித எலும்புக்கூடு எல் சால்வடோரில் கண்டெடுப்பு

3,000 ஆண்டு பழைமையான மனித எலும்புக்கூடு எல் சால்வடோரில் கண்டெடுப்பு

1 mins read
744642e1-2dd0-43bd-94eb-fbc103291e7b
ஹிஸ்பானிய காலத்திற்கு முந்தைய, ஏறக்குறைய 3,000 ஆண்டுகள் பழைமையான மனித எலும்புக்கூட்டையும் சுடுமண் பாத்திரம் உள்ளிட்ட அரிய பொருள்களையும் எல் சால்வடோர் அகழ்வாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

அண்டிகுவோ குஸ்காட்லான்: எல் சால்வடோரில் ஏறத்தாழ 3,000 ஆண்டுகள் பழைமையான மனித எலும்பு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கலாசார அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) அறிவித்துள்ளது.

தலைநகர் சான் சால்வடோரின் புறநகர்ப் பகுதியான ‘அண்டிகுவோ குஸ்காட்லான்’ எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் ஜூலை 2ஆம் தேதி அது கண்டெடுக்கப்பட்டது.

குப்புறப் படுத்த நிலையில் காணப்பட்ட அந்த மனித எலும்புக்கூடு, முதற்கட்ட ஆய்வுகளின்படி, கி.மு. 850ஆம் ஆண்டைச் சேர்ந்தது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதன் துல்லியமான வயதைக் கணக்கிட கரிமக் காலக்கணிப்பு (Radiocarbon dating) பரிசோதனையும் பாலினத்தை உறுதிசெய்ய மரபணு ஆய்வுகளும் நடத்தப்பட உள்ளன.

கடல் ஆமையின் வடிவில் உள்ள சிறிய ‘உசுலுட்டான்’ பாணி சுடுமண் பாத்திரம், பல்வேறு காலகட்டங்களில் படிந்த எரிமலை சாம்பலுக்கு அடியில் பாதுகாப்பாக இருந்த மரவள்ளிக்கிழங்கு கிளையின் எச்சங்கள் உட்பட வேறு பொருள்களும் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு, பண்டைய மெசோஅமெரிக்க மக்களின் வாழ்வியல் முறை, பண்பாட்டைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவும் என தொல்பொருள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 1970களில் எல் சால்வடோரின் சால்சுவாபா பகுதியில் 33 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வட்டாரத்தில் மனிதப் பலியிடல் நிகழ்ந்ததற்கான மிகப்பழைமையான ஆதாரமாக அது கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்