ஜகார்த்தா: இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மியன்மார் நாட்டின் உள்நாட்டுக் கொந்தளிப்பு பற்றியே அதிகம் பேசப்படுகிறது.
மியன்மாரில் அமைதியைக் கொண்டுவர ஆசியான் அமைப்பு பல திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் அதை முன்னெடுத்துச் செல்ல தீவிரமாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் லீ சியன் லூங் செவ்வாய்க்கிழமை மாநாட்டில் பேசும்போது கூறினார்.
உயர்மட்டக் கூட்டங்களில் மியன்மாரின் ராணுவ ஆட்சிக்குழுவைச் சேர்ந்த தலைவர்கள் அந்நாட்டைப் பிரதிநிதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் ஆசியான் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இல்லையெனில், ஆசியானின் நம்பகத்தன்மை குறைத்து மதிப்பிடப்படும் எனவும் இதனால் முக்கியப் பங்காளி நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவு பாதிக்கப்படும் எனவும் அவர் பேசினார்.
மியன்மார், 2026ஆம் ஆண்டு ஆசியான் அமைப்புக்குத் தலைமை வகிப்பதாக இருந்தது.
ஆனால் ஆசியான் தலைவர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் இப்போது அதற்குப் பதிலாகப் பிலிப்பீன்ஸ் அந்த ஆண்டில் பொறுப்பேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மியன்மாரில் அமைதியைக் கொண்டுவர அறிமுகம் செய்யப்பட்ட 5 அம்ச அமைதித் திட்டம் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என 43வது ஆசியான் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை வலியுறுத்துகிறது.
அத்திட்டத்தின்படி, மியன்மாரில் வன்முறையை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்நாட்டுத் தலைவர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த ஆசியான் சிறப்புத் தூதரை நியமிக்க வேண்டும்.
மனிதாபிமான அடிப்படையில் மியன்மாருக்கு ஆசியான் உதவிகள் செய்ய வேண்டும்.
ஆசியான் பேராளர்கள், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்திக்க மியன்மாருக்கு செல்ல வேண்டும் .
அந்நாட்டில் அமைதியைக் கொண்டுவர ஆசியான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மியன்மார் விவகாரத்தைக் கையாள இந்த ஐந்து அம்ச அமைதித் திட்டம் முக்கியப் பங்காற்றும் எனக் கூறப்பட்டது.