ஹோ சின் மின் சிட்டி: வெளிநாடுகளில் இருந்து வியட்னாமின் ஹோ சின் மின் சிட்டியில் உள்ள டான் சொன் நாட் அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடையும் பயணிகள் இணையத்தில் அவர்களது விவரங்களை பதிவு செய்யும் முறை ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
புதிய விதி வெளிநாட்டவருக்கு மட்டுமின்றி நாடுதிரும்பும் வியட்னாமியருக்கும் பொருந்தும். குடிநுழைவு செயல்பாடுகளை மேம்படுத்தி கூட்ட நெரிசலை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடன் அந்த வருகையாளர் அட்டை சமர்ப்பிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் விவரங்களை ஹோ சின் மின் சிட்டி குடிநுழைவுத் துறை அலுவலகம் தெரிவித்தது. நாட்டின் தென்பகுதியில் இயங்கும் அந்த விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் மற்ற விமான நிலையங்களைவிட அதிகம்.
எனவே அதன் செயல்முறைகளை நவீனமயமாக்கி அங்கு வரும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று குடிநுழைவுத் துறை அலுவலகம் தெரிவித்தது.
ஹனோய் நகரில் உள்ள நொய்பாய் அனைத்துலக விமான நிலையம் உட்பட புதிய விதிமுறை மற்ற விமான நிலையங்களில் அமல் படுத்தப்படவில்லை. அவ்வாறு வியட்னாமின் அனைத்து விமான நிலையங்களிலும் வருகையாளர் அட்டை இணையப் பதிவு முறை செயல்படுத்தப்படுமா என்பது பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

