போகோடா: மேற்கு கொலம்பியாவில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.
சனிக்கிழமை (ஏப்ரல் 25) நடத்தப்பட்ட அத்தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாக அந்நாட்டுக் காவல்துறை வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
இந்த வன்முறைக்கு எஃப்ஏஆர்சி பயங்கரவாதக் குழுவிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளர்களே காரணம் என்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொலம்பியாத் தலைநகர் போப்பயானிலிருந்து கிட்டத்தட்ட 35 கி.மீ., தொலைவில் உள்ள காக்கா வட்டாரத்தின் காஜிபியோ நகராட்சியின் எல் துனல் பகுதியில் உள்ள பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்தாக்குதலுக்கு காக்கா ஆளுநர் ஆக்டேவியோ குஸ்மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏப்ரல் 25ஆம் தேதி அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்தக் கொடுமைகளை காக்கா வட்டாரம் இனி தனித்து எதிர்கொள்ள முடியாது. தீவிரமான பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம். அதற்கு உடனடியாகப் பதிலடி கொடுக்க வேண்டும். நாம் சந்தித்துவரும் இந்தக் கடுமையான பொது ஒழுங்கு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வலுவான நடவடிக்கையை தேசிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்,” என வலியுறுத்தினார்.

