நோம்பென்: முன்னாள் கம்போடியப் பிரதமர் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் பலர் அவசர அவசரமாக தாய்லாந்து எரிபொருளையும் நீர் போத்தல்களையும் குவித்து வருகின்றனர்.
தாய்லாந்தில் உள்ள கம்போடிய ஊழியர்களைத் திருப்பி அனுப்புமாறு சவால் விடுத்ததுடன் கம்போடியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதைக் நிறுத்த முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரையை திரு ஹுன் சென் சாடினார் என்று க்மர் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது. அது, தன்னையே அழித்துக்கொள்ளும் செயலாகும் என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
அதோடு, தாய்லாந்திலிருந்து கலன்களில் அடைக்கப்படும் பொருள்கள் (canned goods) இறக்குமதியாவதைத் தற்காலிகமாக நிறுத்தப்போவதாகவும் திரு ஹுன் சென் மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில், தாய்லாந்திலிருந்து தருவிக்கப்படும் போத்தல் நீரைக் கம்போடியர்கள் பலர் சேகரித்து வருகின்றனர். சிலர் ஒளித்துவைத்து சட்டவிரோதமாக தாய்லாந்து போத்தல் நீரை நாட்டுக்குள் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவில் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக அளவில் எரிபொருள் தேவைப்படுவதாகவும் அதனால் அந்நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். அதனால் எரிபொருள் ஏற்றுமதியை தாய்லாந்து நிறுத்திக்கொண்டால் அது கம்போடியாவைப் பெரிய அளவில் பாதிக்கும் என்று மக்கள் கவலைகொண்டுள்ளனர்.
அதன் காரணமாக கம்போடியர்கள் பலர் தாய்லாந்துக்கு வாகனம் ஓட்டிச் சென்று அங்கு வாகனங்களுக்கான எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.