பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஒரு விலங்குத் தோட்டத்தில் மனிதக் குரங்கு (chimpanzee) ஒன்று கீழே வீசப்பட்ட சிகரெட் துண்டை எடுத்துப் புகைத்தது.
அதுதொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அந்த விலங்குத் தோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவாங்ஷி நகரில் உள்ள நானிங் விலங்குத் தோட்டத்தில் உள்ள மனிதக் குரங்கு புகைக்கும்படியான காணொளி ஒன்று மார்ச் 11ஆம் தேதி இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
நான்கு நாள்களில் அந்தக் காணொளியைக் கிட்டத்தட்ட 228,000 பேர் பார்த்தனர். மேலும் 9,800க்கும் அதிகமானவர்கள் விருப்பக் குறியிட்டனர்.
சம்பவம் குறித்து தங்களுக்கு மார்ச் 12ஆம் தேதியே விவரம் தெரியவந்தது என்றும் இஅது குறித்து விசாரணை தொடங்கிவிட்டோம் என்றும் விலங்குத் தோட்டம் தெரிவித்தது.
எந்த நாள் இந்தக் காணொளி எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெளிவாக வெளியிடப்படவில்லை.
விலங்குத் தோட்டத்திற்கு வந்தவர்கள் யாரேனும் வேண்டும் என்றே சிகரெட் துண்டை குரங்கிடம் வீசினார்களா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

