தைப்பே: போர்ப் பயிற்சிகளை மிக விரைவாக, உண்மையான தாக்குதல்களாக மாற்ற சீனா திட்டமிட்டு அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தைவானின் மூத்த தற்காப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 14ஆம் தேதியன்று தைவானைச் சுற்றி சீனா பேரளவிலான போர்ப் பயிற்சியை நடத்தியது.
தைவானைத் தனது ஒரு பகுதியாக சீனா கருதுகிறது.
ஆனால் இதைத் தைவான் மறுக்கிறது.
தன்னை ஒரு தனிநாடாகவே அது பார்க்கிறது.
இந்நிலையில், தைவானிய அதிபர் லாய் சிங் டேவை ஒரு பிரிவினைவாதி என்று சீனா சாடியுள்ளது.
பிரிவினைவாத நடவடிக்கைகளில் தைவான் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிவரும் சீனா, அதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போர்ப் பயிற்சிகளை நடத்திவருகிறது.
ஆக அண்மையில் நடைபெற்ற போர்ப் பயிற்சியில் 153 சீனப் போர் விமானங்கள் ஈடுபட்டதாகத் தைவான் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
தைவானுக்கு அருகில் சீனக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான 25 படகுகள் சென்றதாகக் கூறப்படுகிறது.
போர்ப் பயிற்சியின்போது இரண்டு ஏவுகணைகளைச் சீனா பாய்ச்சியதாக அந்தத் தைவானிய மூத்த அதிகாரி தெரிவித்தார்.
அவை எவ்விடத்தை நோக்கி பாய்ச்சப்பட்டன என்பது குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை.
ஆனால் தைவானை நோக்கி ஏவுகணைகள் பாய்ச்சப்படவில்லை என்றார் அவர்.
இதுகுறித்து சீனத் தற்காப்பு அமைச்சு கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் தேவைப்பட்டால் தைவானுக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரிக்கை விடுத்தது.