காத்மாண்டு: இயற்கைப் பேரிடரின் கடும் விளைவுகளை எதிர்கொண்ட நேப்பாளத்தில் பேரிடர் நடந்து 10 நாள்கள் கடந்து, அதன் நீர்மின்நிலையம் ஒன்றிலிருந்து சீன ஊழியர் ஒருவர் சனிக்கிழமை (செப்டம்பர் 5) உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மண்சரிவுகளும் பெருவெள்ளமும் தாக்கிய ரசுவா பகுதியில் உள்ள திரிசூலி-1 நீர்மின்நிலையத்திலிருந்து அந்தச் சீனர் நேப்பாள ராணுவப் படையின் பேரிடர் தேடல், மீட்புப் படையினரால் உயிருடன் சுரங்கத்திலிருந்து வெளியில் கொண்டுவரப்பட்டார்.
நேப்பாளப் பள்ளத்தாக்கில் நடந்த இந்தக் கோரமான இயற்கைப் பேரிடரில் 1,300 பேர் உயிரிழந்ததுடன் 5,600 பேரைக் காணவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
225 மீட்டர் நீளமுள்ள ‘அப்பர் திரிசூலி-1’ எனப்படும் அந்த நீர்மின்நிலையத்திலிருந்து லு ஹை தாவ் என்ற அந்த ஆடவர் மீட்கப்பட்டதாக நேப்பாள ராணுவம் தெரிவித்தது.
அதற்கு முதல்நாள் வெள்ளிக்கிழமை அதே ஆற்றில் ‘அப்பர் திரிசூலி-3A’ எனப்படும் நீர்மின்நிலையத்திலிருந்து ஊழியர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டபிறகு இந்த மீட்பும் நிகழ்ந்துள்ளது.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடந்த பேரிடரில் ஆற்றில் இயங்கிய ஆறு நீர்மின்நிலையங்களில் ஊழியர்கள் ஏறத்தாழ 900 பேர் சுரங்கங்களில் சிக்கியிருப்பதாக மீட்புப் படையினர் நம்புகின்றனர்.
மீட்கப்பட்ட லு ஹை தாவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தியபிறகு அவரை ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காணொளிகளை நேப்பாள ராணுவம் பகிர்ந்துள்ளது.
நிலைதடுமாறியவராய்க் காணப்பட்ட அவரின் உடல், உடைகள்மீது காய்ந்துபோன சேறும், தூசியும் படர்ந்து காணப்பட்டன.


