காத்மாண்டு: இமயமலையில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளம் சாதாரண நிகழ்வன்று என நேப்பாளப் பிரதமர் பாலேந்திர ஷா கூறியுள்ளார்.
அது பருவநிலை மாற்றத்தால் தூண்டப்பட்டது என்றும் அனைத்துலக அளவில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சீனா-நேப்பாள எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 900க்கும் மேற்பட்டோர் மாண்டனர். கிட்டத்தட்ட 4,500 பேரைக் காணவில்லை. மறுநிர்மாணப் பணிகளுக்கான செலவு, பில்லியன்கணக்கான டாலரைத் தொடக்கூடும் என்று நேப்பாள அரசாங்கம் எச்சரித்துள்ளது.
“ரசுவாவில் உள்ள போதேகோஷி ஆற்றில் ஏற்பட்டது சாதாரண வெள்ளமன்று,” என்று பிரதமர் பாலேந்திர ஷா, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
“இது இமயமலைப் பகுதியில் பனி, பனிப்பாறைச் சரிவுகளால் தூண்டப்பட்ட பேரழிவுகளில் ஒன்று,” என்றார் அவர்.
பனிப்பாறை சரிவிற்கான துல்லியமான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும், உலகளாவிய ரீதியில் பருவநிலை மாற்றம் பனிப்பாறைகளை உருக்குவது, இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கான ஆபத்துகளை அதிகரிக்கிறது.
உலக அளவில் வெப்பம் அதிகரித்து வருவதால், உலகின் மிக உயரமான மலைத்தொடரான இமயமலை வேகமாக உருகிவருவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
“பருவநிலை மாற்றத்துடன் சேர்ந்து இமயமலைப் பகுதியில் நாம் எதிர்கொள்ளும் ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது,” என்று திரு ஷா குறிப்பிட்டார்.
“எனவே, இந்தப் பகுதி தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.


