காத்மாண்டு: நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் மாண்டோரின் எண்ணிக்கை ஆகக் கடைசி நிலவரப்படி 500ஐத் தொடும் நிலையில் உள்ளது.
நேப்பாளத்திலும் அண்டைப் பகுதியான திபெத்திலும் கிட்டத்தட்ட 1,000 பேரைக் காணவில்லை. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) காலை நிலவரப்படி 469 பேர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், இரண்டு ஏரிகளில் நீர் தேங்குவதால் புதிதாக வெள்ளம் ஏற்படக்கூடும் என்று நேப்பாளமும் சீனாவும் எச்சரித்துள்ளன.
புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை பனிப்பாறை ஒன்று சரிந்ததால் பாறைகள், மண், இடிபாடுகளைக் கொண்ட வெள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளைப் புரட்டிப்போட்டதாக இரு நாடுகளும் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட ஒரு பாதை, மலையேறிகளும் யாத்திரிகர்களும் அதிகம் பயணம் செய்யும் ஒன்றாகும். அது, நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுடன் திபெத் தலைநகர் லாசாவை இணைக்கும் பாதை.
காணாமற்போனவர்களில் குறைந்தது 540 பேர் வெளிநாட்டவர். அவர்களில் குறைந்தது ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
திபெத்தில் சுற்றுப்பயணிகள் மீட்பு
பேரிடரால் திபெத்தில் சிக்கிய 555 சுற்றுப்பயணிகளைச் சீன அதிகாரிகள் மீட்டதாக அந்நாட்டின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மீட்கப்பட்டவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை சின்ஹுவா குறிப்பிடவில்லை.
இந்த எண்ணிக்கை, நேப்பாளத் தரப்பு வெளியிட்டதுடன் தொடர்புள்ளதா என்பது தெரியவில்லை என்று பிபிசி ஊடகம் கூறியது.
அனைத்துலக உதவிக்கு மறுப்பு
இந்நிலையில், தேடல், மீட்புப் பணிகளில் கைகொடுக்கப் பல நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. ஆனால், நேப்பாளம் அதை மறுத்துள்ளது.
தேடல், மீட்புப் பணிகளைக் கையாளும் ஆற்றல் தங்களின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்ளதாக நேப்பாளம் கூறியுள்ளது.
அதற்குப் பதிலாக ஒரே தளம் வழியாக ரொக்கமாக நன்கொடை பெற நேப்பாளம் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்புப் பணிகளின்போது கூடுதல் நிதியுதவி, மற்றவகை ஆதரவு கோரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதி ஆதரவு வழங்க ஏற்கெனவே சில நாடுகள் முன்வந்துள்ளன. அவற்றைவிட அதிகமான நாடுகள் தேடல், மீட்பு, மறுவாழ்வு, மறுசீரமைப்புப் பணிகளில் நேப்பாளத்துக்குக் கைகொடுக்க முன்வந்துள்ளன.
இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தேடல், மீட்புப் பணிகளில் கைகொடுக்க முன்வந்துள்ளனர்.


