பேங்காக்: தென்தாய்லாந்திலும் வடமலேசியாவிலும் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் மாண்டோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 12ஆக அதிகரித்தது.
கடந்த மூன்று நாள்களாக வெள்ள நீர்மட்டம் அதிகரித்ததால், அந்த இரு நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறினர்.
தென்தாய்லாந்தில் 534,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு, வெள்ளத்தால் நான்கு பேர் உயிரிழந்ததாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) அறிவிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை அந்த எண்ணிக்கை ஒன்பதுக்கு அதிகரித்தது.
200க்கும் மேற்ட்ட தற்காலிகத் தங்குமிடங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டதாக தாய்லாந்தின் பேரிடர் தடுப்பு, தணிப்புத் துறை கூறியது.
அந்த வட்டாரத்தின் சோங்க்லா மாநிலத்தில் உள்ள சானா மாவட்டம் 50 ஆண்டு காணாத மோசமான வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கிறது.
அதேபோல, மலேசியாவில் ஒன்பது மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி, அந்த மாநிலங்களைச் சேர்ந்த 139,000 மக்கள் பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மழை, வெள்ளத்தில் மூன்று பேர் மாண்டதாக மலேசியாவின் தேசிய பேரிடர் தளபத்திய நிலையம் வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.