ஓஸ்லோ: நார்வே தலைநகர் ஓஸ்லோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) வெடிப்பு நிகழ்ந்தது.
அது பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்று நார்வே காவல்துறையினர் கருதுகின்றனர்.
அதிகாலை நிகழ்ந்த அவ்வெடிப்புச் சம்பவத்தில் தூதரகத்திற்கு லேசான சேதம் ஏற்பட்டது என்றும் எவரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
“அது பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், அதனை உறுதியாகச் சொல்வதற்கில்லை,” என்று காவல்துறை உயரதிகாரி ஃபிரோட் லார்சன் கூறினார்.
வெடிப்பை அடுத்து, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துவருவதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் நார்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, ஓஸ்லோ அமெரிக்கத் தூதரகத்தில் நிகழ்ந்த வெடிப்பு குறித்து அறிந்துள்ளதாகவும் அதுபற்றி விசாரித்து வருவதாகவும் அமெரிக்க உள்துறை அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
தூதரக வாயிலுக்கு வெளியே கண்ணாடிகள் உடைந்து சிதறிக் கிடந்ததையும் கண்ணாடிக் கதவு ஒன்றில் விரிசல்கள் இருந்ததையும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள் காட்டின.
இந்நிலையில், அச்சம்பவத்தை ஏற்க முடியாது என்று நார்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அதுபோல், தூதரக அமைப்புகளின் பாதுகாப்பு மிக முக்கியம் என்று நார்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் எய்டும் கூறியிருக்கிறார்.

