கோலாலம்பூர்: மலேசியாவின் தற்போதைய நிர்வாகத்தின்கீழ் தமிழ்ப் பள்ளிகள் மூடப்படாது என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
“இந்த அரசாங்கத்தின்கீழ் எந்த எஸ்ஜேகேடியும் மூடப்படாது,” என்ற அவர், தேசிய தமிழ்ப் பள்ளிகளை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என இந்திய சமூகத்திற்கு உறுதியளித்தார்.
கெடா மாநிலத்தில் உள்ள ‘எஸ்ஜேகேடி’ எனப்படும் கத்தும்பா தேசிய வகைத் தொடக்கத் தமிழ்ப் பள்ளி மூடப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அப்பள்ளியில் ஒன்பது மாணவர்கள் மட்டுமே இருந்தாலும்கூட தொடர்ந்து பள்ளி இயங்குவதற்கான முயற்சியை அமைச்சு எடுக்கும் என்றார் திருவாட்டி ஃபட்லினா. பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றுவதும் கருத்தில் கொள்ளப்படும்.
மற்ற பிள்ளைகளைப் போலவே அந்த ஒன்பது மாணவர்களும் தங்களது கல்வியைத் தொடர்வதை அமைச்சு உறுதிப்படுத்தும் என்றார் அவர்.
இதற்கிடையே, ‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதக் கல்விக்கான பணிக்குழு தற்போது செயல்படுவதாகச் சுட்டிய அமைச்சர், ஸ்டெம் துறைகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரிப்பதை இக்குழு உறுதிசெய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

