வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் புதிய வரிகள் எதிர்பார்த்ததைவிட அதிகம் என்று அமெரிக்காவின் மத்திய வங்கித் தலைவர் சேர் ஜெரொம் பவல் கூறியுள்ளார்.
அந்தக் கூடுதல் வரிகளால் பொருளியல் சரிவும் விலைவாசி உயர்வும் அதிகமாக இருக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார்.
“வேலையின்மை விகிதமும் விலைவாசியும் உயரக்கூடிய அபாயத்தை எதிர்நோக்குகிறோம்,” என்ற திரு பவல், திரு டிரம்ப் அறிவித்த புதிய வரிகளால் தோக்கியோ, லண்டன், நியூயார்க் பங்குச் சந்தைகள் பலத்த அடிவாங்கியதாகக் குறிப்பிட்டார்.
திரு பவலின் உரை நம்பிக்கையளிக்குமா என்று முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த போதும் மத்திய வங்கியே நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக சொல்லப்படுவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
2020ஆம் ஆண்டு கொவிட்-19 நோய்ப்பரவலுக்குப் பின் கடுமையாக சரிந்த பங்குச் சந்தைகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க இதுதான் சரியான தருணம் என்று அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியபோதும் அவ்வாறு செய்வதில் அவசரப்படப்போவதில்லை என்று திரு பவல் குறிப்பிட்டார்.
“எனவே மத்திய வங்கி நான்காம் காலாண்டுவரை காத்திருந்து அதன்பின் வட்டி விகிதத்தைக் குறைக்கும்,” என்ற திரு பவல், இனிவரும் மாதங்களில் விலைவாசி உயரக்கூடும் என்பதால் பொறுமையாக முடிவெடுப்பதாகச் சொன்னார்
அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் முன்னுரைப்பாளர்கள் அனைவரும் கணித்ததைவிட மிகவும் அதிகமாக இருப்பதாகச் சொன்ன திரு பவல் இது மிகவும் நிச்சயமற்ற சூழல் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
கொள்கை அளவில் மாற்றங்கள் செய்ய இன்னும் தெளிவான சூழல் உருவாகும் வரை காத்திருக்கத் தயாராக இருப்பதாக திரு பவல் குறிப்பிட்டார்.