பெர்லின்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் தீவைத்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவருக்கு 72 வயது என்றும் தீச்சம்பவத்தில் மூன்று பேர் மாண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்,
தீச்சம்பவம் மரின்கிரான்கெஸ் மருத்துவமனையில் உள்ள மூத்தோர் சிகிச்சைப் பிரிவில் நடந்தது. மாண்டவர்களின் வயது 84க்கும் 87க்கும் இடைப்பட்டது.
மேலும் இச்சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்களுக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திங்கட்கிழமை (ஜூன் 2) நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளதா என்று விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது அந்த 72 வயது சந்தேக நபர் தீப்பற்ற வைத்ததற்கான செயல்களில் ஈடுபட்டது கிட்டத்தட்ட உறுதியானது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தீச்சம்பவம் நள்ளிரவில் ஏற்பட்டதாகும் அது மருத்துவமனையின் முதல் தளம்வரை பரவியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூத்தோர் சிகிச்சைப் பிரிவில் தீ ஏற்பட்டதால் நோயாளிகளை வெளியேற்றுவதில் சிரமங்களை எதிர்நோக்கியதாகத் தீயணைப்புத் துறை பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார். விசாரணை தொடர்கிறது.

