புதுடெல்லி: இந்தியாவின் மத்திய உயர்நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) அதன் பாடத்திட்டத்தை வழங்கும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
அதன்படி, சிபிஎஸ்சி கல்வித் திட்டத்தில் மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் இரண்டு கட்டாயமாக இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்திய மொழிகளை, குறிப்பாகத் தாய்மொழியை உள்ளடக்கிய கல்வித் திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் இது அமைந்தாலும் மேற்கத்திய அல்லது இந்தியாவை பூர்வீகமாகக் கொள்ளாத மொழிகளை இந்திய அரசாங்கம் எதிர்க்கும் விதமாக அமைந்தது என்று பெற்றோர் கவலை தெரிவித்தனர்.
ஸ்பானிய, ஜெர்மானிய, பிரெஞ்சு மொழிகளை வழக்கமான பாடத்திட்டத்தில் பயின்று வந்த மாணவர்கள், புதிய கல்வி ஆண்டில் அவை அகற்றப்படும் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர். இதன் விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஞாயிற்றுக்கிழமை (மே 3) வெளியிட்டது.
நாட்டின் ஏறத்தாழ 33,000 பள்ளிகள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை வழங்குகின்றன. அந்த வாரியத்தின் மத்தியக் கல்விக் கொள்கைப்படி, ஆங்கிலம் மட்டுமே மூன்று மொழிகளில் ஒன்றாக இந்திய மொழி அல்லாத இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளமுடியும்.
அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றான ஆங்கிலம், இந்தியப் பள்ளிகளில் பரவலாக மாணவர்களால் பயிலப்பட்டு மக்கள் தேர்வுசெய்யும் பயிற்றுவிப்பு மொழியாகவும் திகழ்கிறது.
தேசிய ஒருமைப்பாட்டையும் கலாசாரப் புரிந்துணர்வையும் இத்திட்டம் மேம்படுத்தும் என்று வாரியம் விளக்கமளித்தது.


