மணிலா: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில் இந்திய, பிலிப்பீன்ஸ் கடற்படைகள் முதல் முறையாகக் கூட்டு சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டன.
இத்தகவலை பிலிப்பீன்ஸ் ராணுவம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) வெளியிட்டது.
இரண்டு நாள்கள் கூட்டு சுற்றுக்காவல் பணியில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் ஈடுபட்டன. கூட்டு சுற்றுக்காவல் பணி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கியது.
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 4) அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டார். புதுடெல்லியில் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்துறை, கலாசாரம், தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பான உடன்பாடுகளில் இருநாடுகளும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே தற்காப்பு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படுமா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
தென்சீனக் கடல் முழுவதும் தனக்குச் சொந்தமானது என்று சீனா அடித்துக்கூறிவரும் நிலையில் இந்தியக் கடற்படையுடன் பிலிப்பீன்ஸ் கடற்படை அங்கு கூட்டு சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.