லண்டன் கத்திக்குத்து: பல உயிர்களைக் காப்பாற்றிய ரயில் நிலைய ஊழியர் படுகாயம்

லண்டன் கத்திக்குத்து: பல உயிர்களைக் காப்பாற்றிய ரயில் நிலைய ஊழியர் படுகாயம்

1 mins read
96ca498a-8f01-4776-9166-950121439a96
தாக்குதலில் காயமடைந்த 11 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

லண்டன்: பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் நிகழ்ந்த கத்திக்குத்துத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

டான்காஸ்டரிலிருந்து லண்டனில் உள்ள கிங்ஸ்கிராசுக்குச் சென்றுகொண்டிருந்த ரயிலில் தொடங்கிய தாக்குதல் கேம்பிரிட்ஜ்ஷியர்வில் உள்ள ஹன்டிங்டனில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இத்தாக்குதல் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 2) அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்தது.

தாக்குதலில் காயமடைந்த 11 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களில் ஐவர் வீடு திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பல உயிர்களைக் காப்பாற்றிய ரயில் நிலைய ஊழியரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல்காரரிடமிருந்து ரயில் பயணிகளைப் பாதுகாக்க முற்பட்டபோது அவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தமது உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களைக் காப்பாற்றிய ஊழியரின் பெயரைப் பிரிட்டிஷ் காவல்துறை வெளியிடவில்லை.

ஆனால், அந்த ஊழியர் துணிவுடன் செயல்பட்டதாகக் காவல்துறை பாராட்டியது.

தாக்குதல்காரர் எனச் சந்தேகிக்கப்படும் 32 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பாக 35 வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கும் அந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்ததை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.

தாக்குதல் நிகழ்ந்த இடத்திலிருந்து கத்தி ஒன்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணை நடைபெறுகிறது.

தாக்குதலை அடுத்து, பிரிட்டனில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்