வாஷிங்டன்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடனான சந்திப்பின்போது காஸாவில் பிணைபிடிக்கப்பட்டுள்ளோரை விடுவிப்பதில் கவனம் செலுத்தியதாகக் கூறியுள்ளார்.
புதன்கிழமை (ஜூலை 9), எக்ஸ் தளத்தில் அவர் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும், ‘ஹமாஸ்’ தரப்பின் ராணுவ, அரசாங்க ஆற்றலைத் துடைத்தொழிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் திரு நெட்டன்யாகு வலியுறுத்தினார்.
ஈரான் விவகாரத்தில் அடைந்த மாபெரும் வெற்றியின் சாத்தியக்கூறுகள், அதன் பின்விளைவுகள் ஆகியவை குறித்தும் தாங்கள் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.
திரு டிரம்ப், கடந்த ஜனவரி 20ஆம் தேதி, அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து திரு நெட்டன்யாகு அமெரிக்கா சென்றது இது மூன்றாவது முறை.
ஜூலை 8ஆம் தேதி இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்து காஸா நிலவரம் குறித்துக் கலந்துரையாடினர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு விரைவில் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.