மியாமி: வெனிசுவேலா, ஈரான்மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 27), மியாமியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கியூபா குறித்த தமது நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.
அந்த நாட்டின்மீது தாம் எடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்து அதிபர் டிரம்ப் விவரமாகக் குறிப்பிடவில்லை என்றாலும், கியூபா கடுமையான பொருளியல் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாகவும் அவர் அடிக்கடி கூறி வருகிறார்.
டிரம்ப் நிர்வாகம் கடந்த சில வாரங்களாகக் கியூபாவின் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. அதேவேளையில், கியூபாமீது ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் அதிபர் டிரம்ப் மறைமுகமாகச் சில நேரங்களில் குறிப்பிட்டுள்ளார்.
மியாமி கருத்தரங்கில் உரையாற்றியபோது, “நான் உலகின் மிகச்சிறந்த ராணுவத்தைக் கட்டமைத்துள்ளேன். அதனை ஒருபோதும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வராது என்றே நான் கூறி வந்தேன். ஆனால், சில நேரங்களில் நாம் அதனைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில், அடுத்த இலக்காகக் கியூபா உள்ளது,” என்றார் அவர்.
எனினும், “நான் அப்படி சொல்லவில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள்,” எனச் சற்று கிண்டலாகத் தமது பேச்சின் இறுதியில் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, கியூபா அதிபர் மிகுயல் டயஸ்-கனெல், அமெரிக்காவுடன் போர்ச் சூழலைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் நாடு பேச்சு நடத்தி வருவதை ஒப்புக்கொண்டுள்ளார்.

