மணிலா: தென்சீனக் கடல் பிரச்சினை தொடர்பில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் பற்றியும் அங்கு நிலவும் பதற்றநிலை குறித்தும் கலந்துபேச, சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திக்கப்போவதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் ஏபெக் மாநாட்டுக்கு இடையே, அவரைச் சந்திக்கப்போவதாகத் திரு மார்க்கோஸ் தெரிவித்தார்.
“மேற்கு பிலிப்பீன்ஸ் கடலில் உள்ள நிலைமை மோசமாகாமல் இருப்பதற்கு நாம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சீன அதிபரிடம் கலந்துபேசுவோம்,” என்று திரு மார்க்கோஸ் காணொளிச் செய்திவழி தெரிவித்தார்.
“அமைதியைக் கட்டிக்காக்க நாம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதால், முன்னோக்கிச் செல்வதற்கான வழிகளில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்றார் அவர்.
முன்னதாக அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிசுடன் தென்சீனக் கடல் விவகாரங்களைப் பற்றி கலந்துபேசியதாகவும் திரு மார்க்கோஸ் கூறினார்.
சீனா கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தென்சீனக் கடலுக்கும் உரிமை கோருகிறது.

