கோலாலம்பூர்: பெர்சத்துவிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஹம்சா ஸைனுடினின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து பெரிக்காத்தான் நேஷனல் (பி.என்.) விரைவில் விவாதிக்கும் என்று பாஸ் துணைத் தலைவர் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தொகுதியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விவாதத்தில் ஈடுபடுவார்கள் என்று திரு இப்ராஹிம் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்த விஷயம் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பி.என். தலைமையுடன் விவாதிக்கப்படும்,” என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.
லாருட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சா, கட்சியின் ஒழுங்குமுறை வாரியத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெர்சத்துவின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 18 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக சனிக்கிழமை கூறினார்.
வெள்ளிக்கிழமை அவரும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 16 கட்சித் தலைவர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
மக்களவையில் 43 இடங்களைக் கொண்ட பாஸ் கட்சி, ஹம்சாவை ஆதரிப்பதாக நீண்ட காலமாகக் கூறப்படுகிறது. அவர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதும் இஸ்லாமியக் கட்சியின் ஆதரவுடன்தான்.
பிஎன் தலைமை கொறடா தக்கியுதீன் ஹசான், ஹம்சா எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வார் என்றும், ஏனெனில், அவர் பெர்சத்துவில் இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவே இருக்கிறார் என்றும் சனிக்கிழமை கூறினார்.
இருப்பினும், பெர்சத்து தலைமைச் செயலாளர் அஸ்மின் அலி, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஹம்சாவை மாற்றுவது குறித்து தனது கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையில், பாஸ் மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடவில்லை என்றாலும், பாஸ் மற்றும் பெர்சத்துவைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட பி.என். கூட்டணியின் நிலைத்தன்மை குறித்து இஸ்லாமியக் கட்சிக்குள் கவலைகள் இருப்பதாக திரு இப்ராஹிம் கூறினார்.

