நியூயார்க்: அண்மையில் நிறைவடைந்த உலகக் கிண்ண காற்பந்து போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மின்னிலக்க நாணய (கிரிப்டோ கரன்ஸி) நிறுவனத்தின் இணை நிறுவனர் சாக் விட்கோவ் சொகுசு தங்கும்விடுதி ஒன்றிலிருந்து கண்டுகளித்தார்.
அதிபர் டிரம்ப், திரு விட்கோவ் ஆகிய இருவரும் தங்களிடம் இருக்கும் செல்வத்தை மேலும் பெருக்கிக்கொள்ள உதவிய ஒருவரும் அப்போது உடன் இருந்தார். அவரும் ஆட்டத்தை அந்த இடத்தில் அன்று திரு விட்கோவுடன் இருந்து பார்த்து ரசித்தார்.
அந்த மனிதர் குரென் ‘பாபி’ சூ எனப்படும் சீனர் என்று அறியப்படுகிறது. அந்த ஆடவர் முன்பு வீட்டுத் தரையில் பயன்படும் மரத்தளங்களை பிரிட்டனில் சில்லறை விற்பனை செய்து தோல்வியடைந்தவர் ஆவார்.
அவர்மீது பிரிட்டன் அதிகாரிகள் 2024ல் கள்ளப்பரிவர்த்தனைக் குற்றங்களுக்கு விசாரணை நடத்திவந்தனர். அதோடு ஒரு புதிய மின்னிலக்க நாணய நிறுவனத்தைத் தொடங்கி பிறகு அது மூடப்பட்டதால் அதற்கும் அவர் விசாரிக்கப்பட்டுவந்தார்.
இதற்கிடையே எங்கிருந்தோ துள்ளிக் குதித்து வருவதுபோல அவர் அதிபர் டிரம்ப்பின் ‘வோர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்ஷியல்’ என்ற நிறுவனத்தில் மின்னிலக்க நாணயங்களை வாங்குவதாக $128 மில்லியன் (US$100 மில்லியன்) செலவிட்டார். அதற்கு அவர் அகுவா1 என்ற நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டார்.
அது குறித்து மிகவும் அமைதியாக இருந்த பாபி அவ்வப்போது எக்ஸ் சமூக ஊடகத்தில் அவரது குரலை பதிவிட்டு அதிபர் டிரம்பையும் அவரது குடும்பத்தினரையும் பாராட்டி அவர்களது நிறுவனத்தில் இணைவதில் பெருமைகொள்வதாகப் பதிவிடுவார்.
அதிபர் டிரம்ப்பும் அவரது மூன்று மகள்களும் நிர்வகிக்கும் ஒரு நிறுவனத்துக்கு பாபி முதலீடு செய்த தொகையில் S$96 மில்லியனுக்கு மேல் மாற்றப்பட்டது. வோர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் நிதிக் கொள்கைப்படி இது நடந்தது.
அதிபர் டிரம்ப்பின் குடும்ப நிறுவனத்துக்குச் சென்ற பணம் திரு விட்கோவின் குடும்பத்துக்கும் பலன் அளித்தது. அதிபர் டிரம்ப் அமைத்த மத்திய கிழக்கு சிறப்பு நிர்வாகக் குழுவில் சாக் விட்கோவின் தந்தை சிறப்புத் தூதராகச் செயல்படுகிறார்.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் இத்தகைய தொகை எந்தவொரு அதிபரின் நிறுவனத்துக்கும் கிடைத்திருந்தால் அரசாங்க விசாரணைக்கு அது உட்படுத்தப்பட்டிருக்கும்.
அதிபர் டிரம்ப்பை திருப்தியடையச் செய்ய பாபி போன்ற அடையாளம் தெரியாதவர்கள் மின்னிலக்க நாணய முதலீட்டால் பின்புலம் மறைக்கப்பட்டு மிக எளிதாகப் பணத்தை வாரி வழங்குவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அதிபர் டிரம்ப் வெளியிட்ட அண்மைய நிதி நிலவரப்படி இதுவரை S$1.792 பில்லியன் நிதியை (US$1.4 பில்லியன்) மின்னிலக்க நிறுவனத்தின் வழியாக 2025ல் அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.


