ஜெருசலம்: காஸா மருத்துவமனை மேல் நடத்தப்பட்ட தாக்குதலின்போது மாண்ட இரண்டு செய்தியாளர்கள்மீது குறிவைக்கவில்லை என்று இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைமீது தாக்குதல் நடத்துவதற்கான தீர்மானம் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்த கூடுதல் விசாரணைக்கு ராணுவத் தலைவர் உத்தரவிட்டிருப்பதாகவும் பேச்சாளர் சொன்னார்.
இம்மாதம் 25ஆம் தேதி காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனைமீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இரு செய்தி செய்தியாளர்கள் உள்பட 20 பேர் மாண்டனர்.
அந்த இரண்டு செய்தியாளர்களும் ராய்ட்டர்ஸ், அஸ்ஸோசியெடட் பிரெஸ் (ஏபி) (Associated Press), அல் ஜசீரா ஆகியவை உள்ளிட்ட செய்தி நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர்கள்.
“ராய்ட்டர்ஸ், ஏபி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் எங்கள் தாக்குதலின் குறியல்ல என்பதை உறுதியுடன் சொல்ல முடியும்,” என்று ராய்ட்டர்சிடம் ராணுவப் பேச்சாளர் லெஃப்டினென்ட் கர்னல் நாடாவ் ஷோஷானி கூறினார்.
தாக்குதலில் மேலும் மூன்று செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்.
காஸா போரின்போது நாசர் மருத்துவமனையின் காட்சிகளை சொந்த கேமராக் கருவிகளைக் கொண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அடிக்கடி ஒளிபரப்பியது.
கடந்த சில வாரங்களாக, தாக்கப்பட்ட மருத்துவமனையின் நிலை குறித்த காணொளிகளை ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பியது.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலின்போது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது கேமராவை இயக்கிக்கொண்டிருந்த ஹுசாம் அல் மஸ்ரி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் குறிவைத்த ஆறு பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கு இடையே மாண்ட ஐந்து செய்தியாளர்களில் ஒருவர்மீது கூட குறிவைக்கப்படவில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை வெளியிட்டது.
ஹமாஸ், இஸ்லாமிய ஜீஹாத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் ஆறு பேரின் புகைப்படங்களையும் அறிக்கை வெளியிட்டது.