மணிலா: யாகி புயலால் பிலிப்பீன்சில் ஏற்பட்ட கனமழை காரணமாக தலைநகர் மணிலாவில் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 2) பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மணிலாவின் நகர்ப்புறப் பகுதிகளில் இருக்கும் அரசாங்க, தனியார் பள்ளிகளைத் தற்காலிகமாக மூடுமாறு அந்நாட்டு அதிபர் அலுவலக நிர்வாகச் செயலாளரான லூக்கஸ் பெர்சாமின் உத்தரவிட்டார் என்று ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஆலோசனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மோசமான வானிலையால் பிலிப்பீன்ஸ் ஏர்லைன்ஸ், செபு ஏர் ஆகியவை வழங்கும் உள்நாட்டு விமானச் சேவைகளில் சில ரத்து செய்யப்பட்டதாகவும் மணிலா அனைத்துலக விமான நிலைய ஆணையம் கூறியது.
பிலிப்பீன்சில் எந்தெங் என்றழைக்கப்படும் யாகி புயல் காற்று மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதாக உள்ளூர் வானிலை நிலையமான பகாசா தெரிவித்தது. இப்புயல், திங்கட்கிழமை பிற்பகல் அல்லது இரவில் இஸாபெல்லா அல்லது ககாயான் மாநிலத்தைத் தாக்கக்கூடும் என்றும் அந்நிலையம் குறிப்பிட்டது. வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பகாசா சொன்னது.
பிலிப்பீன்ஸ், ஆண்டுதோறும் சுமார் 20 சூறாவளிகளால் பாதிக்கப்படுகிறது.
