வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப்பால் நிதியமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்காட் பெசன்ட், வியாழக்கிழமை (ஜனவரி 16) அமெரிக்க செனட்டர்களின் விசாரணையை எதிர்கொள்கிறார்.
இவ்வேளையில், உலகளாவிய நிலையில் மத்திய வங்கிகளின் இருப்பு நாணயமாக (reserve currency) அமெரிக்க டாலரின் மதிப்பைத் தக்கவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் உறுதியளித்துள்ளார்.
திரு டிரம்ப் கூறும் வரிக் குறைப்பு, வரி விதிப்புத் திட்டங்களைத் திரு பெசன்ட் எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்று செனட் நிதிக் குழு கேள்வி எழுப்பும். அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு (சிங்கப்பூரில் வியாழக்கிழமை இரவு 11.30 மணி) செனட்டர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார்.
புதன்கிழமை இரவு வெளியிட்ட குறிப்புகளில், ‘புதிய பொருளியல் பொற்காலம்’ குறித்த கண்ணோட்டத்தை பெசன்ட் விவரித்தார். அமெரிக்கப் பொருளியல் வளர்ச்சிக்கு உதவும் உத்திபூர்வ முதலீடுகளுக்கு முன்னுரிமை தருவதும் 2017ஆம் ஆண்டு திரு டிரம்ப் தனிநபர்களுக்கும் சிறிய நிறுவனங்களுக்கும் அறிவித்த வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவதும் அவற்றில் அடங்கும். அந்த வரிக்குறைப்பு நடைமுறை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவிருக்கிறது.