மணிலா: பிலிப்பீன்சின் லூசோன் தீவின் வடகிழக்குப் பகுதியில் ‘டிராமி’ புயல் அக்டோபர் 24ஆம் தேதி காலை, கரையைக் கடந்தது.
இதனால் பிலிப்பீன்சின் வடக்கு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட இடங்களில் பள்ளிகளும் அரசாங்க அலுவலகங்களும் தொடர்ந்து இரண்டு நாள்களாக மூடப்பட்டுள்ளன.
கனமழை தொடரும் என்றும் வெள்ளம் மோசமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ‘டிராமி’ புயல் மேற்குத் திசையை நோக்கி, அதாவது தென்சீனக் கடலை நோக்கி விரைவதாக பிலிப்பீன்ஸ் வானிலை மையம் தெரிவித்தது.
இந்நிலையில், பிலிப்பீன்சின் மத்தியப் பகுதியில் உள்ள பிக்கோல் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
அப்பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் தரை வீடுகளின் கூரை வரை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வானிலை மோசமாக இருப்பதால் பிலிப்பீன்சின் மத்திய வங்கி பணப் பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.