லண்டன்: பிரிட்டன், வேல்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளை டாரா (Darragh) சூறாவளி பதம்பார்த்துள்ளது.
சனிக்கிழமை (டிசம்பர் 7) காலைமுதல் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. மேலும் ரயில்,சாலை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் பயணம் மேற்கொள்பவர்கள் சிரமத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் விழிப்புநிலையில் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதையடுத்து வேல்ஸ் மற்றும் தென் மேற்கு இங்கிலாந்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சூறாவளியால் பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு முதலே கைப்பேசி மூலம் எச்சரிக்கைத் தகவல்களை அரசாங்க அமைப்புகள் அனுப்பின.
சூறாவளியால் சிரமமான நிலைமையை எதிர்கொள்கிறோம் என்று பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனத்தன் ரெனால்ட்ஸ் தெரிவித்தார்.
டாரா சூறாவளியால் வாரயிறுதியில் கனத்த மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டது. அதனால் பிரிட்டனில் 100க்கும் அதிகமான இடங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லேன்கசைய்ர் பகுதியில் வீசிய சூறாவளியால் மரம் ஒன்று வேன் மீது விழுந்தது. வேனில் இருந்த ஆடவர் மாண்டார்.
தொடர்புடைய செய்திகள்
வேல்ஸ் நாட்டில் சூறாவளி மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதாகக் கூறப்பட்டது. பலத்த காற்றால் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதனால் 50,000 பேர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்திலும் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்தன.