சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்த வர இறுதியில் நடைபெற உள்ள வேளையில், பலர் சீனா உட்பட வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பிருக்கும் சூழலில் வூஹானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூர் சுகாதார அமைச்சு இன்று (ஜனவரி 22) வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூரில் வூஹான் வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனைக் கையாளும்பொருட்டு பல அமைச்சுகள் பங்கேற்கும் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்தது.
வூஹானுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், நிமோனியா தொற்று கண்டாலோ வூஹானில் இரு வாரங்கள் வரை இருந்திருந்தாலோ அருகில் இருக்கும் மருத்துவரை நாடி உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சிங்கப்பூர் வாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் மருத்துவமனைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இந்த வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட எழுவருக்கு அந்த நோய்த்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவருக்கு அந்தத் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சீனாவின் வூஹான் நகரில் உருவாகியிருக்கும் ‘சார்ஸ்’ போன்ற ‘வைரஸ்’ பன்மடங்கு பெருகி பெருமளவில் பரவும் அபாயம் இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது.
சீனா முழுவதும் புதிய கிருமி அதிவேகத்தில் பரவி வருகிறது. இதுவரை 13 மாநிலங்களில் 440 பேருக்கு கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒன்பது பேர் பலியாகிவிட்டனர்.
மோசமான நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் கொரோனா எனும் கிருமி தொற்றிய நோயாளிகளுடன் நெருக்கமாக இருந்ததாக நம்பப்படும் மேலும் 2,197 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் மனிதரிடமிருந்து மனிதருக்கு புதிய வைரஸ் பரவுவதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சரான லி பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சளி, இருமல், தும்மல் உள்ளிட்ட சுவாசக் காற்று மூலம் நோய் பரவக்கூடும்.
அந்த கிருமி பல்கிப் பெருகலாம் என்பதால் மேலும் அந்நோய் பரவக்கூடிய அபாயமிருப்பதாக திரு லி பின் எச்சரித்தார்.
இவ்வார இறுதியில் சீனப் புத்தாண்டு விடுமுறையையொட்டி மில்லியன் கணக்கான மக்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ளவிருப்பதால் கிருமி பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடைத் தொகுதிகள் உட்பட பொது இடங்களில் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது, கிருமிக் கொல்லி மருந்துகளைத் தெளிப்பது போன்றவை அவற்றில் அடங்கும். இருப்பினும் மருத்துவமனைக்குள்ளாகவே நோயைக் கட்டுப்படுத்திவிடுவோம் என்று சீனா சூளுரைத்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரை மையமாகக் கொண்டுள்ள கிருமியைக் கட்டுக்குள் கொண்டுவர அந்நகரம் முழுவதும் உள்ள விமான நிலையம், ரயில் நிலையங்களில் சுகாதாரப் பரிசோதனைளை அதிகாரிகள் தீவிர மாக்கியுள்ளனர்.
நகருக்குள் உயிரோடு விலங்குகளைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வூஹான் நகருக்குள் நுழையும் வாகனங்களில் உயிருள்ள கோழி, வாத்து, பன்றி போன்ற உயிரினங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 700,000 பேரை ஈர்க்கும் ஆண்டு பிரார்த்தனைக் கூட்டமும் ரத்தாகி உள்ளது.
இதற்கிடையே சில ஆசிய நாடுகளிலும் வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை அறிவிப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று (ஜனவரி 22) ஆலோசனை நடத்தியது.
#தமிழ்முரசு #வூஹான் #தொற்று #நிமோனியா #சீனா