சிங்கப்பூரிலிருந்து மலேசியா சென்ற கப்பலில் புதிய கிருமித்தொற்று குழுமம்; நால்வருக்கு தொற்று

1 mins read
b2f4d1c1-e9dd-4520-96df-c6b6fab19a1a
அந்த நால்வருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை என்றும் அவர்களில் இருவர் மலேசியர் என்றும் தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் போர்ட் டிக்சனுக்குச் சென்ற கப்பலில் புதிய கிருமித்தொற்று குழுமம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு நேற்று (ஆகஸ்ட் 31) தெரிவித்தது.

"ஆகஸ்ட் 28ஆம் தேதி பரிசோதிக்கப்பட்ட 34 கப்பல் ஊழியர்களில் நால்வருக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; அறுவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ள நிலையில் எஞ்சிய 24 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை," என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அந்த நால்வருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை என்றும் அவர்களில் இருவர் மலேசியர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கிருமித்தொற்று கண்ட நால்வரும் சுங்கை புலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

கப்பலில் கிருமித்தொற்று தெளித்து சுத்தப்படுத்துவது உட்பட கொரோனா தொற்று பரவல் தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், கிருமித்தொற்றுக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிள்ளான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட மற்றொரு கப்பலில் இருவருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டதாகவும் அங்கு பணிபுரிந்த வெளிநாட்டவர் ஒருவர் மூலம் மற்றவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவில் நேற்று 6 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு மொத்த எண்ணிக்கை 9,340 ஆனது. புதிதாக 62 வயது மலேசிய ஆடவர் கொவிட்-19ஆல் உயிரிழந்ததையடுத்து, அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 127 ஆனது.

குறிப்புச் சொற்கள்