பெய்ஜிங்: மலேசியாவுடன் இடம்பெற்ற 20 ஆண்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீனாவில் முதன்முறையாக பலாப்பழங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. மலேசியாவின் துணை வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சான் ஃபூங் ஹின் இதைத் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியன்று மலேசியாவும் சீனாவும் புதிய பலாப்பழ ஏற்றுமதி ஒப்பந்தத்தில் (ஃபிரெஷ் ஜாக்ஃபுரூட் அக்ரீமென்ட்) கையெழுத்திட்டதாக அவர் கூறினார்.
அடுத்த வார இறுதியில் முதன்முறையாக பலாப்பழங்கள் சீனாவில் இறக்குமதியாகும் என்பதையும் திரு சான் குறிப்பிட்டார். செப்டம்பர் மாதம் 16ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதிவரை நன்னிங் நகரில் நடைபெறவுள்ள சீன-ஆசியான் மாநாட்டில் அந்தப் பலாப்பழங்கள் காட்சியிடப்படும் என்றும் அவர் சொன்னார்.
சீனா, இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருள்களுக்கு சுத்தம் தொடர்பான கடுமையான விதிமுறைகளை விதித்துள்ள நாடுகளில் ஒன்று. அப்படியிருக்கையில் இருதரப்பு ஏற்றுமதி ஒப்பந்தங்களின் விதிமுறைகளுக்கு ஈடுகொடுக்க சீனா தயாராய் இருப்பதை அந்நாட்டுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இந்த ஏற்பாடு எடுத்துக்காட்டுவதாக திரு சான் சுட்டினார்.