ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தலைநகர் ஜகார்த்தாவையும் பாண்டுங் நகரையும் இணைக்கும் 7.3 பில்லியன் டாலர் (10 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தோனீசிய அதிபரான ஜோக்கோவி என்றழைக்கப்படும் ஜோக்கோ விடோடோ திங்கட்கிழமையன்று இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.
சீனாவின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த 142 கிலோமீட்டர் நீளம்கொண்ட அதிவேக ரயில் சேவைத் திட்டம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது.
சீனாவின் இணைப்பும் பாதையும் திட்டத்தில் அடங்கும் இது, திரு ஜோக்கோவியின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்று. அளவுக்கதிகமான செலவு, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலினால் ஏற்பட்ட தாமதங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் திட்டத்தில் எழுந்திருக்கின்றன.
‘வூஷ்’ என்று பெயரிடப்பட்ட அதிவேக ரயில் சேவையை 2019ஆம் ஆண்டில் தொடங்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.