பேங்காக்: சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான விசா நிபந்தனையை தாய்லாந்து தற்காலிகமாக விலக்கியதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் தாய் ஏர்வேஸ் விமான நுழைவுச்சீட்டுகள் கிட்டத்தட்ட முழுமையாக விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 விழுக்காட்டு நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக அந்த விமானச் சேவையை வழங்கும் தாய் ஏர்வேஸ் இன்டர்னேஷனல் நிறுவனம் கூறியது.
“சீனாவிலிருந்து தாய்லாந்துக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது,” என்று தாய் ஏர்வேஸ் விமானத்தின் தலைமை வர்த்தக அதிகாரி கொராக்கொட் சட்டசிங்ஹா திங்கட்கிழமையன்று புளூம்பர்க் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தென்கிழக்காசியாவின் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியல் நாடான தாய்லாந்து, சுற்றுப்பயணத் துறையை அதிகம் சார்ந்திருக்கிறது. அதற்கு மெருகூட்ட அந்நாடு சட்டங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது, விமான நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. அண்மையில் பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் புதிய முனையம் ஒன்றும் திறக்கப்பட்டது.
அந்த வகையில் சீன சுற்றுப்பயணிகளை மையமாகக் கொண்டு பொருளியலை மேம்படுத்துவது தாய்லாந்தின் இலக்கு.