இலங்கைக்கு நிபந்தனையின்றி உதவ, பாகிஸ்தானுக்கு நிபந்தனையுடன் உதவ சீனா தயார்

இலங்கைக்கு நிபந்தனையின்றி உதவ, பாகிஸ்தானுக்கு நிபந்தனையுடன் உதவ சீனா தயார்

2 mins read
60f1f00d-a4ae-4cf7-b62a-5ad7070982ab
சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள மக்கள் மாமண்டபத்தில், சீனாவின் கடல், தரை உள்கட்டமைப்பு, எரிசக்தி கட்டமைப்புத் திட்டத்தின் 10வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நடந்த கருத்தரங்களில் அக்டோபர் 18ஆம் தேதி சீன அதிபர் ஸி உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெய்ஜிங்: பாகிஸ்தானுடன் கூடிய ஒத்துழைப்பைப் பலப்படுத்தவும் அந்த நாட்டுடன் ஒற்றுமையை மேம்படுத்தவும் சீனா விரும்புவதாக சீன அதிபர் ஸி ஜின் பிங் தெரிவித்தார்.

ஆனால் அதற்குக் கைமாறாக பாகிஸ்தானில் செயல்படும் சீன நிறுவனங்களின் பாதுகாப்புக்கு அந்த நாடு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

அதோடு, பாகிஸ்தானில் வேலை பார்க்கும் சீன நாட்டவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அதிபர் நிபந்தனை விதித்தார்.

சீனாவும் பாகிஸ்தானும் அணுக்க நாடுகள்தான். இருந்தாலும்கூட பாகிஸ்தானில் பிரிவினைவாதிகளும் இஸ்லாமிய தீவிரவாதிகளும் அண்மையில் சீன நிறுவனங்களைத் தாக்கி இருக்கிறார்கள். சீனர்களைக் கொன்று இருக்கிறார்கள்.

சீனா, 130க்கும் மேற்பட்ட நாடுகளைக் கூட்டி தனது உலகளாவிய கடல், தரை உள் கட்டமைப்பு, எரிசக்தி கட்டமைப்புத் திட்டம் பற்றி விவாதிக்க கருத்தரங்கை நடத்தியது.

அதில் பாகிஸ்தான் காபந்து அரசின் பிரதமர் அன்வார் உல் ஹக் காகர் கலந்து கொண்டார்.

சீனாவும் பாகிஸ்தானும் மேம்படுத்தப்பட்ட இரு நாட்டுப் பொருளியல் திட்டத்தைத் தொடர வேண்டும். தொழில்பேட்டைகளில் வேளாண்மை, சுரங்கம், புதிய எரிசக்தி, பெரிய இணைப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தினார்.

இதனிடையே, அரசியல் ரீதியிலான நிபந்தனைகள் எதுவுமே இல்லாமல் இலங்கைக்கு உதவி வழங்க சீனா தயார் என்றும் அதிபர் ஸி தெரிவித்தார்.

பெய்ஜிங்கில் நடந்த அந்தக் கருத்தரங்கில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலந்துகொண்டார்.

அவருடன் பேச்சு நடத்திய அதிபர் ஸி, இலங்கையில் இருந்து அதிக பொருள்களை வாங்கவும் சீனா தயார் என்று உறுதி கூறினார். இருநாடுகளும் அனைத்துலக, வட்டார விவகாரங்களில் ஒத்துழைப்பை பலப்படுத்தும் என்றும் சீன அதிபர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்