பேங்காக்: வட மியன்மாரில் ராணுவ அராசாங்கத்துக்கும் அந்நாட்டின் சிறுபான்மை குழுக்களுக்கும் இடையே தொடரும் சண்டையால் அங்கு சிக்கியிருந்த தாய்லாந்து மக்கள் நாடு திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் சிக்கியிருந்த 41 தாய்லாந்து மக்கள் சனிக்கிழமையன்று (18 நவம்பர்) நாடு திரும்பியதாக தாய்லாந்து ராணுவம் கூறியது.
2021ஆம் ஆண்டு மியன்மார் ராணுவம் வலுக்கட்டாயமாக ஆட்சியைக் கைப்பற்றியது. அதனையடுத்து தொடரும் சண்டையால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
மியன்மாரின் ராணுவ அரசாங்கம், அந்நாட்டின் ஜனநாயக ஆதரவு கிளர்ச்சியாளர்கள், மூன்று சிறுபான்மை இனத்தவர் ஆகியோரை உள்ளடக்கும் கூட்டணியை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப் பூசலில் சிக்கியிருந்த 41 தாய்லாந்து மக்கள், மியன்மாரின் ஷான் மாநிலத்திலிருந்து நாடு திரும்பினர். டாச்சிலெய்க்-மய் சாய் எல்லைவழி அவர்கள் தாய்லாந்து சென்றனர்.
தாய்லாந்து அதிகாரிகளும் மியன்மார் ராணுவமும் இணைந்து அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக தாய்லாந்து ராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
லாவ்க்காய் நகரில் சிக்கியிருக்கும் குறைந்தது 264 தாய்லாந்து மக்களை மீட்கும் முயற்சியில் தாய்லாந்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சிக்கியிருப்போரில் சிலர் கடத்தப்பட்டு வந்தவர்கள் என்று தாய்லாந்து ராணுவம் குறிப்பிட்டது. கடத்தப்பட்டோரில் சிலர் தொலைத்தொடர்பு மோசடியில் ஈடுபடும் குழுக்களுக்குத் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மியன்மார் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகள், தொலைத்தொடர்பு, இணைய மோசடிச் செயல்களுக்கான மையப் பகுதியாக உருவெடுத்துள்ளது என்று ஐக்கிய நாட்டு சபை தெரிவித்திருக்கிறது. குற்றவாளிக் கும்பல்கள் நூறாயிரக்கணக்கானோரைக் கடத்தி அவர்களை வலுக்கட்டாயமாக மோசடிச் செயல்கள் இடம்பெறும் நிலையங்களில் வேலை செய்ய வைக்கப்பட்டதாக ஐக்கிய நாட்டு சபை கூறியிருந்தது.