கெய்ரோ: ஏமனின் துறைமுக நகரான ஏடனுக்குக் கிழக்கே சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பலுக்கு அருகே வெடிப்பு நிகழ்ந்ததாக அக்கப்பலின் மாலுமி தெரிவித்துள்ளார்.
‘யுகேஎம்டிஓ’ எனப்படும் பிரிட்டனின் கடல்துறை வணிக நடவடிக்கை அமைப்பு, ஞாயிறு (மார்ச் 17) காலை அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
வெடிப்புச் சம்பவத்தால் கப்பலுக்குச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் சிப்பந்திகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்தக் கப்பல் அடுத்து செல்லவேண்டிய துறைமுகம் நோக்கிப் பயணத்தைத் தொடர்வதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏடன் நகருக்கு 85 கடல் மைல் (157 கிலோமீட்டர்) தொலைவில் அந்தக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. அந்த வட்டாரத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் அல்லது அமெரிக்காவுடன் தொடர்புடையதாகத் தாங்கள் கருதும் கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தியதுண்டு.
கடந்த சில மாதங்களாக செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால், உலக அளவில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் மாற்றுப் பாதையில் ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியைச் சுற்றிக் கப்பல்களைச் செலுத்த வேண்டியிருப்பதால் கூடுதல் நேரமும் செலவும் ஆவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர், மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளிலும் பரவி நிலைத்தன்மையைக் குலைக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்தது.
சனிக்கிழமை, ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா வானூர்தி ஒன்றை அழித்ததாகவும் மற்றொரு ஆளில்லா வானூர்தி செங்கடலில் விழுந்ததாகவும் அமெரிக்க ராணுவம் கூறியது.