கோலாலம்பூர்: சீனாவின் தலைமையில் கட்டப்படும் 10 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ரயில் திட்டத்தை தாய்லாந்து எல்லை வரை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்போவதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்துக்கும் தனக்கும் இடையிலான பொருளியல் தொடர்புகளுக்கு மெருகூட்டும் நோக்கில் மலேசியா இவ்வாறு செய்கிறது.
சீனாவின் பெரும் வர்த்தக வழித் தடத் திட்டத்தின் ஓர் அங்கமான இந்த ரயில் பாதையின் நீளம் 665 கிலோமீட்டர். 50.27 பில்லியன் ரிங்கிட் (10.63 பில்லியன் வெள்ளி) செலவில் கட்டப்படும் அது, 2026ஆம் ஆண்டுக்குள் மலேசியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் என்பது எதிர்பார்ப்பு.
அந்த ரயில் பாதையை மலேசிய-தாய்லாந்து எல்லைப் பகுதிக்கு நீட்டிப்பதற்கான பரிந்துரைகளைத் தாங்கள் வரவேற்பதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் கூறினார். தற்போது செயல்பாட்டில் இருக்கும் ரயில் பாதைகள் அல்லது வருங்காலத்தில் அமைக்கப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றுடன் புதிய ரயில் பாதையை இணைப்பது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
திரு லோக் மேல்விவரங்கள் எதையும் வழங்கவில்லை.
“மலேசியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே உள்ள ரயில் இணைப்புகள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டால் இருநாடுகளுக்கும் இடையே பயணிகள் வந்து செல்வதும் சரக்குகளைக் கொண்டு செல்வதும் துரிதப்படுத்தப்படும். அது பொருளியல் வளர்ச்சிக்கு மெருகூட்டும்,” என்று திரு லோக் மலேசிய நாடாளுமன்றத்தில் சொன்னார்.
இதுகுறித்து கேட்கப்பட்டபோது தாய்லாந்தின் போக்குவரத்து அமைச்சுக்கான பேச்சாளர் கருத்து தெரிவிக்கவில்லை.
புதிய ரயில் திட்டத்துக்கான பரிந்துரை 2017ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. மலேசியாவில் உள்ள சைனா கம்யூனிக்கேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எனும் சீன கட்டுமான நிறுவனத்தின் கிளை புதிய ரயில் பாதையை உருவாக்கிவருகிறது.