பேங்காக்: தாய்லாந்துக் கடற்பகுதியில் கோ தாவ் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஏப்ரல் 4ஆம் தேதி காலை தீப்பற்றி எரிந்தது.
அதில் இருந்த பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தாய்லாந்து நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி இரவு 11 மணிக்கு சுராட் தானியிலிருந்து புறப்பட்டு கோ தாவ் தீவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது கோ ஜாரோன் 2 எனும் பெயர் கொண்ட படகில் தீ மூண்டது என்று கோ தாவ் காவல்துறைத் தலைவர் போல் கோல் சொக்சாய் சுத்திமெக் கூறினார்.
தீச்சம்பவம் குறித்து தாய்லாந்து நேரப்படி காலை 7 மணிக்குத் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
படகில் 97 பயணிகள், 11 சிப்பந்திகள் ஆகியோருடன் சரக்குகளும் இருந்தன.
கோ தாவ் படகுத்துறையைப் படகு நெருங்கியபோது அதன் இயந்திர அறையில் தீ மூண்டது.
தகவல் கிடைத்ததும் கோ தாவ் தீவில் படகுச் சேவையை நடத்துவோரும் அதிகாரிகளும் படகில் இருந்தோரைக் காப்பாற்ற படகுகளை உடனடியாக அனுப்பிவைத்தனர்.
படகில் இருந்தோர் அனைவரும் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.