பேங்காக்: அதிக வசதிகொண்ட சுற்றுப்பயணிகளை ஈர்க்க ஐந்து நாடுகளுடன் இணைந்து கூட்டு விசா ஒன்றை உருவாக்கும் முயற்சியை தாய்லாந்து வழிநடத்துகிறது.
தாய்லாந்து உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அந்த ஆறு நாடுகள் சென்ற ஆண்டு மொத்தமாக சுமார் 70 மில்லியன் சுற்றுப்பயணிகளை வரவேற்றன. கூடுதல் காலத்துக்கு வருகை தரும் அல்லது அதிகம் செலவுசெய்யும் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் அனுகூலங்களுக்கு மெருகூட்டும் முயற்சியில் அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் ஈடுபட்டுள்ளார்.
கூட்டு விசா வழங்குவது குறித்து திரு ஸ்ரெத்தா, கம்போடியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், வியட்னாம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் கலந்து பேசியுள்ளார். அந்நாடுகளுக்கிடையே சிக்கலின்றி சீராகப் பயணம் மேற்கொள்ள வகைசெய்வது கூட்டு விசா திட்டத்தின் இலக்காகும்.
ஐரோப்பாவின் ஷென்கன் வட்டார நாடுகளுக்கிடையே அத்தகைய கூட்டு விசா திட்டம் தற்போது நடப்பில் உள்ளது.
சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருந்துவரும் தாய்லாந்தை விமானத் துறை மற்றும் தளவாட மையமாக உருவெடுக்கச் செய்யப்போவதாக திரு ஸ்ரெத்தா உறுதியளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆறு நாட்டுத் தலைவர்களும் கூட்டு விசா திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சுற்றுப்பயணிகளிடமிருந்து பெறும் வருவாயை அதிகரிக்க தாய்லாந்து எண்ணம் கொண்டுள்ளது.
மந்தமாக இருக்கும் ஏற்றுமதிச் சந்தை, உலகளவில் தேவை குறைந்திருப்பது ஆகியவற்றால் தாய்லாந்தின் உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய அம்சங்களிலிருந்து தனது பொருளியலைப் புதிய கூட்டு விசாவின் மூலம் ஈட்டப்படும் வருவாயைக் கொண்டு பாதுகாப்பதும் தாய்லாந்தின் நோக்கமாகும்.
சுற்றுப்பயணம் தொடர்பில் நீண்டகாலத்துக்காக திரு ஸ்ரெத்தா பல அனுகூலங்களை வரைந்துள்ளார். அவற்றில் இந்தக் கூட்டு விசா திட்டமே ஆகப் பெரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் 500 பில்லியன் டாலர் (674.7 பில்லியன் வெள்ளி) மதிப்புள்ள பொருளியலில் சுற்றுப்பயணத் துறை கிட்டத்தட்ட 12 விழுக்காட்டுப் பங்கை வகிக்கிறது.