ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் இருக்கும் ஒரு பேரங்காடியில் 30 வயதுகளில் உள்ள ஒரு பெண் தானியங்கிப் படியில் (travelator) ஏறிக்கொண்டிருந்தபோது, அதில் திடீரென பிளவு ஏற்பட்டதால், அவரது உடலின் கீழ் பாதி அதில் விழுந்தது.
ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக சீன செய்தி நிறுவனமான தி பேப்பர் தெரிவித்தது.
சம்பவத்தைப் படம்பிடித்த கண்காணிப்புக் கருவிக் காட்சிகளின்படி, தானியங்கிப் படியில் ஏற்பட்ட இடைவெளியில் அந்தப் பெண் விழுந்த பிறகும் அப்பாதை தொடர்ந்து மேல்நோக்கி நகர்ந்தது.
அதிலிருந்து வெளியேற அப்பெண் சிரமப்பட்டதை அடுத்து, உதவி கேட்டு அவர் அலறினார்.
அங்கிருந்த ஆடவர் அந்தத் தானியங்கிப் படியில் கீழே விரைந்து அவசரகால ‘ஸ்டாப்’ பொத்தானை அழுத்தி அதன் செயல்பாட்டை நிறுத்தினார்.
அந்தத் தானியங்கிப் படியின் உள்கட்டமைப்பு “சிக்கலானது” என்று விவரிக்கப்பட்டதால், அப்பெண்ணை மீட்க தீயணைப்பு வீரர்கள் மின்சாரத்தால் இயக்கப்படும் ரம்பம் போன்ற மின்கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
தீயணைப்புப் படையினர் அந்த இடைவெளியிலிருந்து அந்தப் பெண்ணை மீட்டெடுக்க 30 நிமிடங்களுக்குமேல் எடுத்துக்கொண்டனர். பின்னர் அப்பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகும், ஏப்ரல் 7ஆம் தேதி பிற்பகல் நிலவரப்படி, அந்தப் பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாக அவருடைய கணவர் கூறினார்.
அந்தப் பெண்ணுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. இதில் தோல் உரிதல், கால்களில் எலும்பு முறிவு உள்ளிட்டவை அடங்கும்.
எலும்பு மருத்துவ நிபுணர்கள் அந்தப் பெண்ணின் சிகிச்சையில் ஈடுபட்டாலும், அவரது கால்கள் துண்டிக்கப்பட நேரிடலாம் என மருத்துவர் ஒருவர் அவருடைய கணவரிடம் கூறினார்.
தங்களுக்கு 10 வயது பிள்ளை இருப்பதாக அப்பெண்ணின் கணவர் பகிர்ந்தார். அப்பெண்ணின் தாயார் அப்பிள்ளையைத் தற்போது கவனித்துக்கொள்கிறார்.
கடந்த சில நாள்களாக அந்தப் பெண்ணின் மருத்துவக் கட்டணத்தைப் பேரங்காடி செலுத்தி வருகிறது. அந்தப் பெண்ணின் கணவரின் சுமையைக் குறைக்க இது உதவியுள்ளது.
மருத்துவக் கட்டணம் இதுவரை 100,000 யுவானுக்குமேல் (S$18,648) இருந்ததாக அப்பெண்ணின் கணவர் மதிப்பிட்டார்.
ஏப்ரல் 7ஆம் தேதி காலை தற்காலிகமாக மூடப்பட்ட பேரங்காடி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தி பேப்பர் தெரிவித்தது.