பெய்ஜிங்: தென் சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் விரைவுச்சாலை ஒன்று இடிந்து விழுந்ததில் மாண்டோரின் எண்ணிக்கை 48க்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வியாழக்கிழமையன்று (மே 2) தெரிவித்தது.
கனமழையால் மேய்ஜூ சிட்டி நகரிலிருந்து டாபு பகுதியை நோக்கிய விரைவுச்சாலையின் ஒரு பகுதி புதன்கிழமை (மே 1) அதிகாலை 2.10 மணியளவில் இடிந்ததாக சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. கிட்டத்தட்ட 18 மீட்டர் நீளம்கொண்ட அந்த சாலைப் பகுதிக்கு அருகே இருக்கும் மேடான இடத்திலிருந்து பல வாகனங்கள் விழுந்தன.
இச்சம்பவத்தில் 30 பேர் காயமுற்றதாகவும் சின்ஹுவா தெரிவித்தது.
குவாங்டோங், அதிக மக்கள்தொகையைக் கொண்ட மின்சார விநியோகப் பகுதியாகும். மோசமான பருவநிலை காரணமாக அம்மாநிலம் கடந்த சில வாரங்களாகப் பல பேரிடர்களைச் சந்தித்து வந்துள்ளது.
பொதுவாக ஆண்டுதோறும் இந்தக் காலகட்டத்தில் அம்மாநிலத்தைப் புயல்கள் தாக்குவதுண்டு. எனினும், இம்முறை அவை கூடுதல் வீரியத்துடன் தாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பருவநிலை மாற்றம் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.